Monday, November 2, 2009

அழகான ஸ்பானியப் படங்கள்



தமிழில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மொழியிலும் திகில் படங்கள் எடுப்பது மிகக் குறைவு. அப்படி ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும், ஜிவனற்ற முறையில் எடுக்கப்பட்டதாக இருக்கும். இதுவே அமெரிக்க திகில் படங்கள் என்றால் திரையில் இரத்தம் தெரிக்கும், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் சகட்டுமேனிக்கு கேமெரா சுற்றிச்சுழலும். இப்படிப்பட்ட எந்த சாயலுமில்லாமல் ஐரோப்பிய படங்களும் ஜப்பானிய கொரிய படங்களும் திகில் வரிசையில் தனித்து நிற்கின்றன. கிளாசிக் படமாகவும்,திகிலாகவும் ஒரு படத்தை எடுப்பது கடினமான காரியம் தான். ஐரோப்பிய படங்களில் ஸ்பானியப் படங்களுக்கு தனியிடம் உண்டு. 

2006ல் வெளிவந்து மூன்று ஆஸ்கார்களை வென்ற Pan´s Labyrinth படம் ஒரே கதையமைப்பில் fairy tale போலவும் classic war genre போலவும் அமைந்திருந்தது. ஒரு குழந்தையின் பார்வையில் இரு தளத்திலும் கதை பயனிக்கும். அட்டகாசமான கிராபிக்ஸ், பிரம்மாண்டமான கலைவடிவம் என்றெல்லாம் கதையளக்கும் இந்திய திரையுலகம், இப்படத்தைப் பார்த்தேனும் கிராபிக்ஸ் காட்சிகளை எப்படி அளவோடு அழகாக காட்டவேண்டும் என்று கற்றுக் கொள்ளவேண்டும். 
 
1944 ஸ்பெனில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கட்படை போராடிக் கொண்டிருந்த காலம். ஒபெலியா தன் கற்பமான தாயுடன் தற்போது மணந்துள்ள தந்தையான கேப்டன் விடலிடம் செல்கிறாள். தேவதைகளின் கதைகளுக்குள் சுற்றித்திரியும் அவளது எண்ணத்திற்கு மென்மையான இடமாகவும் அது அமைகிறது. ஒரு இரவில் அவளை தேவதைகள் பாதாளகுகைக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு அவள் சந்திக்கும் faun அவள் பாதாளலோகத்தின் இளவரசி என்று கூறுகிறது. அவள் அந்த லோகத்திற்கு திரும்பிச்செல்ல மூன்று கட்டளைகள் இடப்படுகின்றன. சர்வாதிகார கும்பலுக்கும், போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நிகழும் இருண்ட கொடுமையான உலகிற்கும், ஒபெலியா தேடியலையும் மாய உலகிற்கும் மாறிமாறித்திரியும் கதை. இறுதியில் நிஜ உலகின் பிம்பங்களால் கசக்கியெரியப்பட்டு, இரத்தமயமான வலிகளுடன் பாதள உலகம் பயணிக்கிறாள் ஒபெலியா. இந்தப் படம் கேன்ஸ் விழாவில் திரையிட்டபோது பார்த்தவர்களின் கைத்தட்டல் அடங்க  22 நிமிடங்கள் பிடித்தது.

Saturday, October 31, 2009

படத்தழுவல்

Hansel and Gretel என்பது ஜெர்மானிய சிறுவருக்கான நீதிக்கதைகளுள் ஒன்று. இந்தக்கதையை சிறுவயதில் பள்ளி ஆசிரியர் சொன்ன ஞாபகம். சிற்றன்னையின் சதியாலும் உண்ண உணவில்லாததாலும் தந்தையால் காட்டிற்கு அனுப்பப்படும் இரு பிள்ளைகள் அங்கிருக்கும் சூன்யகார கிழவியிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அவளால் கொடுமைப்படுத்தப்படும் பிள்ளைகள் அவளைக் கொன்று தப்பிப்பது தான் கதை.

சமீபத்தில் இதே கதை அமைப்போடு ஒரு தென்கொரிய மொழிப்படத்தைப் பார்த்தேன். இதில் கதாநாயகனை சிறைபடுத்துவது குழந்தைகள். படத்தின் பெயரும் Hansel and Gretel தான். Misery என்று ஆங்கிலத்தில் வெளியாகி ஆஸ்கார் விருது பெற்ற படத்தின் தழுவல் இது. ஒரு எழுத்தாளர் மனம்பிறழந்த ஒரு பெண்ரசிகையிடம் மாட்டிக்கொண்டு தவிப்பதும், மேலும் அவள் கொடுமை அதிகரித்து ஒரு கட்டத்தில் அவளைக் கொன்றுவிட்டு வெளியெறுவதும் தான் கதை. ஜூலிகணபதி இந்தப் படத்தின் ஈயடிச்சான் காப்பி.


பேராண்மை படத்தை வினவு, மதிமாறன், சுகுணா ஏற்கனவே கிழிகிழினு கிழிச்சிட்டாங்க. நான் சொல்ல நினைத்ததை வினவு சொல்லிவிட்டதால், மேற்கொண்டு நானும் கிழிக்க விரும்பவில்லை. பேராண்மை படத்தில் ஜனநாதன் தன்னுடைய கதை என போட்டுக்கொண்ட At Dawn ist quiet here படத்தைக் காண இங்கே அழுத்தவும். படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்க நம்ம ஆளுங்க எப்படி கூத்தாடி கோலம் போட்டிருக்காங்கனு. ஒரு புரட்சிக்கான கதையை புரட்டி எடுத்து இருக்காங்க.

Saturday, November 8, 2008

எம்.ஜி.ஆர் ரசிகரா...


இந்திய திரையுலகில் சண்டைக் காட்சிகள் மிகவும் இன்றியமையாதவை. குறிப்பாக தமிழ் திரைப்படத்தில் ரசிகர்கள் இதைப் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். எனக்கு எம்.ஜி.ஆர் சண்டைக் காட்சிகள் என்றால் விரும்பிப் பார்ப்பேன். என்னோட அப்பா ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர், அதனால் நானும் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்த்து வளர்ந்தேன். சண்டைக் காட்சிகளைப் பொருத்தவரை, இந்தியாவில் எம்.ஜி.ஆர் போல எந்தக் கதாநாயகனும் சிறப்பாக திரையில் சண்டை செய்து பார்த்ததில்லை. எனக்கு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்ரும் வாலிபன் மிகவும் பிடித்த படம். இருந்தாலும், ரிக்ஷாகாரன் படத்தில் வரும் இறுதிக்காட்சி சண்டை எனக்குப் பிடித்தமானது. சண்டைக் காட்சியில் புரட்சிநடிகர் "சுருள்பட்டை" சுற்றும் ஒளித்துண்டை கீழே கொடுத்துள்ளேன். பார்த்து ரசிக்கவும்.



இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தான், நான் சிலம்பம் கற்றுக் கொள்ள போய் 'வீடு கட்ட' மட்டும் கற்றுக் கொண்டு வந்தேன். பத்தாம் வகுப்பில் படிப்பு, ஹிந்தி டியுசன் என பளு அதிகமானதால், தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்க ஊரு பக்கம் கம்பு சுற்றுவதில் 'சாரபட்டை' சொல்லித் தருவார்கள். நான் ஆசைஆசையாக செய்து வாங்கி வந்த 'பானா கோல்' (சிலம்பம்), இப்போது அரிசி, பருப்பு வெயிலில் காயவைத்தால் காக்கா விரட்டவும், குரங்கு விரட்டவும் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கொசுறு செய்தி:

எம்.ஜி.ஆர் திரைப்படம் பற்றிய அரிய தகவலுக்கு http://mgrroop.blogspot.com போய் பாருங்க!!

பாடகர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர், அதை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.